freelancing writer

My photo
Am Freelance in any Area !

Thursday, October 31, 2019

பாகவதர் வாழ்கையை மாற்றிய கொலை வழக்கு.



(பாகவதர் உட்பட மூவரை நாடுகடத்த தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம்). 

பொழுதுபோக்கிற்காக ஏங்கிய மக்களை கையை பிடித்து தமிழ் சினிமா மீது ஈடுபாடு கொள்ள செய்தவர் எம் கே தியாகராஜா பாகவதர். 
அவர் பசுமையான முகமும் கட்டுடல் கொண்ட பேரழகனும் ஆவார். தன்னுடைய வெண்கல குரலினால் தமிழ் சினிமா ரசிகர்களை அடிமை செய்து வைத்தவர். 
தங்க தட்டில் சாப்பாடு ஓய்வெடுப்பதற்கு வெள்ளி ஊஞ்சல் என்று பிரபலங்கள் யாரும் நினைத்து பார்க்க முடியாத வாழ்கையை வாழ்ந்தவர். M.K.  தியாகராஜர். மாயவரத்தில் 191௦ மார்ச் 1 ல் கிருஷ்ணசாமிக்கும் மாணிக்கம்மாளுக்கும் பிறந்தவர் மாயவரம் க்ரிஷனசாமி தியாகராஜர். சிறு வயதில் படிக்க பிடிக்காமல்  தான் ஒரு பாடகர் ஆக வேண்டும் என்று விரும்பினார்.. இதற்கு அவரது பெற்றோரிடையே எதிர்ப்புகள் வலுத்தது. பின் வீட்டை விட்டு வெளியேறினார். மிகுந்த ஆர்வமும் உழைப்பும் அவரை ஒரு பாடகராக மாற்றியது. பல கச்சேரிகளில் இவரது பாடல் மக்களை  மெய்மறந்து நிற்க செய்துள்ளது. இவரது வெண்கல குரலுக்காகவே எளிதாக நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 
1934 ல் பவளக்கொடி என்ற நாடகத்தில் நடித்தார். அந்த நாடகத்தை பார்த்த சில கலைஞர்கள் இவரை வைத்தே பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை தந்தது. இதனையடுத்து நவீன சாரங்கதாரா, சத்யசீலன், அசோக்குமார் போன்ற படங்களும் வெற்றிபெற்று  M.K.  தியாகராஜர அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. அதன் பின் 1937 ல் வெளிவந்த சிந்தாமணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை M.K.  தியாகராஜருக்கு அளித்தது. மேலும் இது தமிழில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றது. 

இந்த திரைப்படத்தில் வந்த லாபத்திலிருந்து மதுரையில் சிந்தாமணி என்ற பெயரில் திரையரங்கம் கூட அமைக்கப்பட்டது. சிந்தாமணியை அடுத்து M.K.  தியாகராஜர் நடிப்பில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படம் சிந்தாமணியின் சாதனையை முறியடித்து வெற்றியை தந்தது. இதன்பின் M.K.  தியாகராஜர் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வந்தார். இதைவிட 1944 ம் ஆண்டு வெளிவந்த ஹரிதாஸ்  திரைப்படம் தொடர்ந்து மூன்று வருடம் ஓடி பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இந்த வளர்ச்சிக்கு காரணம் இவரது நடிப்பும் அவரது வெண்கல குரலும் தான் என பேசப்பட்டது. இவரது பாடலை கேட்பதற்காகவே திரையரங்கில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 

M.K.  தியாகராஜ பாகவதர் பற்றியான பல சுவாரஸ்மான தகவல்களும் அன்று  இருந்தது.  இவர் வெளி ஊருக்கு காரில் செல்லும் போது இவரது ரசிகர்கள் வழியிலே பாட சொல்லி கேட்பார்கள், அதனையும் ஏற்று பாகவதர் பாடியும் உள்ளார். மற்றும் இவரது தலை முடி போல அன்றைய இளைஞர்கள் இவரைப்போலவே தலை முடியும் வைத்து உள்ளனர். அன்றைய TREND SETTER என்றும் சொல்லலாம். 
இப்படி தன்னுடைய வாழ்கையிலும், ரசிகர்களோட வாழ்கையிலும் சந்தோஷத்தை பார்த்து வந்த பாகவதர்,
1944 ம் ஆண்டு நடந்த லக்ஷ்மி காந்தன் என்பவரின் கொலை இவர் வாழ்கையை தலை கீழாக மாற்றியமைத்தது.   
லஷ்மி காந்தன் என்பர் அன்றைய காலத்தில் ‘சினிமா தூது’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தவர்.  இவரின் சினிமா தூது இதழில் சினிமா விமர்சனம் மட்டுமல்லாமல் அன்றைய திரையுலக நட்சத்திரங்களோட தனிப்பட்ட வாழ்க்கையும், எந்த நடிகர் எந்த நடிகையுடன் உறவு வைத்துள்ளனர் என்ற புனைவு கதைகளையும் வெளியிட்டு வந்துள்ளார்.  இவர் பெயரில் முன்பே சில வழக்குகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட சினிமா தூது இதழ் ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்றும் சிலர் விமர்சித்துள்ளனர். இன்றைய காலத்தில் வெளிவரும் கிசு கிசுக்களை சாதரணமாக மாறி விட்டது. ஆனால் அன்றைய பொழுதில் கிசு கிசு என்பவை சினிமா நட்சத்திரங்களின் சமூக அந்தஸ்தை பாதிக்கும் ஒன்றாக இருந்தது. இதனால் பல நட்சத்திரங்கள் பாதிப்பையும் சந்தித்தனர். இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாகவதருடன், கலைவாணர் என்று அறியப்படும் NS.கிருஷ்ணன் மற்றும் கோவை பக்க்ஷி ராஜா ஸ்டுடியோஸ் உரிமையாளரான ஸ்ரீராம் நாயுடு  மூவரும் அன்றைய மதராஸ் ஆளுநரிடம் சினிமா தூது பத்திரிக்கையின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். பின் ஆளுநர் விசாரணைக்கு பின் சினிமா தூது பத்திரிக்கையின் உரிமைத்தை ரத்து செய்கிறார். பின் லக்ஷ்மி காந்தன் போராடி மீண்டும் சினிமா தூது இதழை வெளியிடுகிறார். அது மீண்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது. பின் லஷ்மி காந்தன் இந்து நேசன் என்ற பெயரில் பத்திரிக்கையை துவங்குகிறார். அதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரிய ஆளுமைகளையும் விமர்சித்து புனைவு கதைகளை வெளியிடுகிறார். பின் பலர் தன் பெயரும் பாதிக்கப்படும் என்ற பயத்தில் பலர் லக்ஷ்மி காந்தனுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டனர். தன்னைப் பற்றி புகார் கொடுத்த மூவரை தன்னுடைய பத்திரிக்கையில் அதிகமாகவே புனைவு கதைகளை வெளியிட்டு விமர்சித்து வந்துள்ளார் லஷ்மி காந்தன்.


1944 ம்  ஆண்டு ஒரு நாள் லக்ஷ்மி காந்தன் யாரும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தப்படுகிறார். அந்த நிலையிலும் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் நடந்தை கூறுகிறார். பின் போலிஸ் ஸ்டேஷன் சென்று ஒரு புகாரையும் அளித்துள்ளார். தான் அளித்த புகரில் பாகவதர் பெயரையோ அல்லது கலைவாணர் பெயரையோ அவர் குறிப்பிடவில்லை. லஷ்மி காந்தன் மறுநாள் காலையில் மருத்துவமனையில் இறந்து விடுகிறார். பின் விசாரணையை தொடர்ந்த பொலிசார், லஷ்மி காந்தானால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விசாரிக்கின்றனர். இதன்படியே பாகவதர், கலைவாணர், போன்றோர் பெயரும் இதில் வருகிறது. அதில் பாகவதரின் வரவு செலவு குறிப்புகளில் லஷ்மி காந்தன் தாக்கப்படுவதற்கு முன்பு ஒரு பெரும்தொகை செலவு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர் போலீசார். இதுபற்றி சரியான விளக்கம் பாகவதர் அளிக்காததால் இதனை ஒரு ஆவணமாகவே போலீசார் எடுத்துக்கொண்டனர். முன்னதாகவே லஷ்மி காந்தனுக்கும் பாகவதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு பாகவதர் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர்.


லஷ்மி காந்தன் கொலை வழக்கில்  வேறு ஒரு தகவலும் இருந்தது. இதை இவர் குத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூறியதாக சொல்லப்படுகிறது. தனுஷ்கோடியிலிருந்து சென்னை வந்த ரயிலில்  தேவக்கொட்டையை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செயப்படுகிறார் அந்த கொலையில் பிரபல சினிமா நடிகை சமந்தபட்டதாகவும், அந்த கொலை நடந்த ஸ்டேஷனிலிருந்து அடுத்த ஸ்டேஷனில் அவர் இறங்கி விட்டதாகவும், அந்த நடிகைக்கு பெரும் அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என்பதாகவும் ஆனால் தான் அதைப்பற்றி ஆதாரத்துடன் செய்தி வெளியிடபோகிறேன் என்று லஷ்மி காந்த சொன்னதால்  தகவல் உள்ள நிலையில் இதன் காரணமாக கூட இவர் கொலை செயப்பட்டிருக்கலாம் என்பது அன்றைய பொழுதில் வந்த தகவல்கள் ஆனால் அதைபற்றி ஆதாரம் ஏதும் கடைசி வரை கண்டறியப்படவில்லை. பாகவதர் உட்பட மூவரும் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நீதிமன்ற விசாரணையில் யாரும் எதிர்பாராத விதத்தில் தீர்ப்பு அமைந்தது. ‘பாகவதர் உட்பட மூவரும் குற்றவாளிகள் இவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும்’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின் மூவரின் தரப்பில் மேல்முறையீடு செய்தும் தீர்ப்பை மாற்ற முடியவில்லை. 

இந்தியாவில் அன்றைய காலத்தில் சுப்ரீம் கோர்ட் உருவாக்கப்படாத காலகட்டம். சுதந்திரத்திற்கு பின்பே சுப்ரீம் கோர்ட் உருவாக்கப்பட்டது. அன்று ஒரு வழக்கு மேல்முறையீடு செல்ல வேண்டுமானால் லண்டனில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு தான் செல்லவேண்டும். அப்படியே பாகவதர் வழக்கு மேல்முறையீட்டை சந்தித்தது லண்டன் நீதிமன்றத்தில் மதராஸ் நீதிமன்றம் இந்த வழக்கை சரியாக விசாரிக்க வில்லை என்றும் இந்த விசாரணையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு அளிக்கபட்டது. அதன்படியே மறுவிசாரணை எடுத்து கொள்ளப்படுகிறது. அதன்முடிவில் பாகவதர் உட்பட மூவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த விசாரணை காலக்கட்டத்தில் வழக்கின் செலவிற்காக பாகவதரின் சொத்துகளும் குறைந்தது. 

சிறையில் இருந்து வெளியான பாகவதருக்கு முன்பு இருந்த கலை அழகு குறைந்தும் அவரது முடி அழகும் இல்லாமல் கண்களில் கருவளையத்துடன் பரிதாப நிலையில் காணப்பட்டார். 

சிறைக்கு செல்வதற்கு முன்பு தன்வசம் இருந்த 12 படங்களும் தற்போது நழுவியது. பின் சமூகத்திலும் இவருக்கென இருந்த சாம்ராஜ்யம் மொத்தமாகவே சரிந்தது. சிறைக்கு பின் சினிமா வை தவிர்த்து வந்தார். பின் நிர்பந்தத்தின் பெயரில் சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை எல்லாம் தோல்வியிலே முடிந்தது. இதன் காரணமாக சினிமாவை விட்டு மொத்தமாகவே வெளியேறினார். மற்றும் சிறையிலிருந்து வெளிவந்த கலைவாணர் தொடர்ந்து நாடகத்திலும், சினிமாவிலும் பயணித்து வந்தார். பின் திராவிட கழகத்திலும் இணைத்தார். திராவிட கழகத்திலிருந்து வந்த அழைப்பை பாகவதர் ஏற்க மறுத்துவிட்டார். இதன் பின் மீண்டும் இசை பயணத்தை தொடங்கி கச்சேரிகளில் பாடி வந்தார் பாகவதர். 

பின் ஒரு கட்டத்தில் அதனையும் வெறுத்து பல  கோவில்களுக்கு செல்ல துவங்கினார். மேலும் டயாபடிஸ் காரணமாக அவதியடைந்தார் பாகவதர். 1959 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல்   உயிரிழந்தார்  மாயவரம் கிரிஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். 

எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் எங்கோ எதனாலோ செய்யப்படும் ஒரு செயல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றம் சந்தோஷமாகவும் அமையலாம் சோகமாகவும் அமையலாம். இந்த மாற்றங்களில் பாகவதர் ஒன்றும் விதிவிலக்கல்ல. 
கலை வாழ்வில் ஓங்கி கொடிகட்டி பறந்த பாகவதர் என்றும் தன் வெண்கல குரலினால் மக்கள் மனதில் உலா வர வேண்டும். 

நன்றி 

- விஜய் தேசிங் 



No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...